செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

தேவன் சபை நுழைந்தேன்
தடவி தழுவி
மடியில் கிடத்திக் கொண்டது அது;
சாத்தானின் சபை புகும்
வாய்ப்பும் கிட்டியது
சாட்டையை சுழற்றிபடி
கோரநகங்களால் கீறி இரத்தம் சுவைத்து
வரவேற்றது அதே காதல்!

இரயில் நிலையத்தின்
இரைச்சலையும் தாண்டி
குரலும்
சிரிப்பொலியும்
இசையாக காதுமடல் வருட;
கண்கள் தேடி
அவள் உருவம் மேல்
முட்டி நின்றது;
முட்டி நின்ற கண்கள்
மூர்ச்சையாகி
நின்றது நின்றபடியே இருந்தது!

கையிருந்த குழந்தைக்கு
முத்தமிட்டு
கையாட்டி
விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள்;
தன் பங்குக்கு
காதணியும் காற்றுக்கு சாடைக்காட்டி
விளையாடிபடி இருந்தது!

புறப்படுவதற்கான அடையாளமாய்
பெரியதாய் இரயில் கனைக்க
அதுவரை அருகிலிருந்தவனிடம்
குழந்தையை கையளித்து
சிரித்து கையசைத்து
வந்தாள் அவள்;
வழி அனுப்ப வந்த அவன்
நண்பனாக இருக்கலாம்
தூரத்து சொந்தமாயிருக்கலாம்
என கணக்குப் போட்ட
குரங்கு மனது
ஒருவேளை
அய்யோ ஒருவேளை
காதலனாக
கணவனாக இருக்ககூடுமோ
எண்ணிய வேளை
மூலையில் குத்தவைத்து
அழ தொடங்கிவிட்டிருந்தது உயிர்!

அதை தொடர்ந்தே நிகழந்தது
நான் நாளிதழில் முகம் புதைத்ததும்;
அவள் பெட்டி நகர்த்தி தரக் கேட்டதும்;
நாளிதழ் நகர முகம் பார்த்து
அவள் உணர்வுகள் மூர்ச்சை ஆனதும்;
அதே நாங்களேதானென
நாங்கள் உறுதிபடித்திக் கொண்டதும்!

காலச் சக்கரங்கள் மெல்ல சுழல
நினைவுகளின் மேல்
பயணத்திருந்தவனை
அவளின் குரல் கைகாட்டி நிறுத்தியது.

'நல்லா இருக்கியா?'
நான் இல்லையோ என்ற சந்தேகத்தில்
முன்னர் காட்டிய 'ங்க' மரியாதை வெட்டி
அவள் பழைய பழக்கத்தில் பேச ஆரம்பிக்க;
'ம்!'
மூடிய வாய் திறவாமல்
மூச்சு வழியே பதில் சொல்ல
மீண்டும்
பள்ளி வயதை அடைந்திருந்தேன் நான்!

- உயிர் இன்னும் உருகும்.
தத்தித் தத்தி
தமிழ் கற்று
கவிதையென
எழுதியவையெல்லாம்
நான் கண்டு கொண்ட
உந்தன் செல்லப் பெயர்கள்!


பரிட்சைக்கு முந்தைய
கடைசி பள்ளி வேலை
நாளது;

படிக்க கொடுக்கும்
படிப்பு விடுமுறையை
களிக்க கணக்குப் போடும்
கூட்டம் ஒன்று!
விடுமுறையை தொடரும்
பரிட்சை பற்றிய
பயத்தில் பதறும்
கூட்டம் மற்றொன்று!

இவ்விரு வேறு
கூட்டத்தினிடையில்
பிரிவை எண்ணி
நடுநடுங்கி இருந்தன
இரு கூடுகள்!

கடைசியாய் பயந்தகிடந்த
அந்நிமிடம் வந்தேவிட்டது
அவ்வகுப்பறையில்
நம் கடைசி மணித்துளிகள்!

கையில் கிடைத்த
கூர்மை பொருள் கொண்டு
நீயே சாட்சியென
மேசையிடம் சொல்லியபடி
மேசையின் உள்பக்கம்
ஒரு பைத்தியமாய்
கிழிக்கிறேன்
இருவர் பெயரையும்!

வெட்டி தொங்கவிடப்பட்ட
தண்டவாள கட்டையில்
பள்ளி முடிந்தற்கான
அடையாளமாய்
நீண்ட மணி அடிக்கப்படுகிறது!
அது
ஏனோ உயிருக்கு
மணியடிப்பதாய் தோன்றுகிறது!

காலியான வகுப்பறையின்
வெறுமை நெஞ்சில் அறைய
கண்ணோரம் துளிர்க்கின்றன
கண்ணீர் துளிகள்!

தலைக்குனிந்து
நகர்ந்தவள்!
தூரமாய் சென்று
நின்று வகுப்பையே
பார்த்துக் கொண்டிருக்கிறாய்!

பக்கமாய் நான் வந்ததும்
'நல்லா படி!'
'நல்லா எழுது!' என்ன? என்கிறாய்;
நீ சொன்ன
அதையே கூட உனக்கு திருப்பிச் சொல்ல
தைரியம் இல்லாதவன்
'ம்!' என்றபடி நகர்கிறேன்;
ஒரு குளத்தளவு நீரை
கண்ணில் தேக்கிக்கொண்டு.

- உயிர் இன்னும் உருகும்...

இதுகாரும் உருகிய உயிர் காண :

06.,05.,04.,03.,02.,01
காதலர் தின வாழ்த்துக்கள்


*

உன்
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்!

*

புல்லாங்குழல்
அழுவதாகவே இருக்கின்றது;
நீ வரும் நாட்களில் மட்டுமே
அது இசையாய் வழிகிறது!

*

மலர் பறிக்கையில்
மேல் விழுந்து சிலிர்ப்பூட்டும்
பனித்துளியாய் உன் நினைவு!

*

கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்;
இன்னும் பூங்காவில்
முதுகோடு முதுகு சேர்த்தபடி
பேசிக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்!

*

என் பார்வைக்கெதிரே
தளிர் இலையொன்று
பழுத்து வர்ணம் மாறி
உதிர்கிறது!
நீ வருகிறாய்
உதிர்ந்திட்ட அவ்விலை
மீளவும் மரம் பொருந்தி
பச்சையாக தொடங்குகிறது!

*

சில முடிகள் வெளுத்துவிட்டன
தேகம் பலவீனமடைந்து விட்டது
தோல்கள் சுருக்கம் கண்டுவிட்டன
என்றாலும் என்ன
இப்போதும்
காதலின் குழந்தைகள் நாம்!

*

காதல் பாதையில்
விழி மூடியபடி
பயணிக்கிறேன்;
வழிகாட்டியபடி
துணைவருகிறது
உந்தன் விழியின் ஒளி!

*

உன்னைவிட்டு பிரிந்து
நடக்கும் தருணங்களில்
என் சவத்தை
நானே சுமந்து தொடர்கிறேன்!

*

மரணம் ஒத்த
தூக்கமதிலும்
கேட்டபடியே இருக்கிறது
உந்தன் விழி படபடக்கும் சப்தம்!

*

கொஞ்சினால் மிஞ்சும்
மிஞ்சினால் கொஞ்சும்
காதலும் குழந்தைதான்!

- ப்ரியன்.

பெரியதாக்கி பார்க்க படம் மேல் சொடுக்கவும்
உன் கூந்தல்
உதிர் பூவின்
இதழொன்று கை சேர்கிறது!
இருதயத்தில் மெல்ல
வசந்தம் மலர்கிறது!



நண்பர்களுடன் நீச்சல்
மிதிவண்டி பயணம்
பிள்ளைகளின் கூக்குரலில்லாமல்
தனியே வாடும் பள்ளி
மைதானத்துடன் பேச்சு;
நீ சாய்ந்து அமர்ந்த
திண்டினை
தீண்டுதலென
நகர்கிறது;
விடுமுறை நாட்கள்!

வீடு கடக்கையில்
ஆத்தோரம் தண்ணி அள்ளுகையில்
என
சந்திக்கும் சமயங்களில்
விழியால் உயிர் வருடிக் கொள்கிறோம்
இறகின் பரிவோடு!

ஊர் சுற்றி
கலைத்து திரும்பும் எனை வரவேற்க
காத்திருக்கும்;
விடுமுறையில்
ஏதாவது உருப்படியா
செய்யேன் எனும் அப்பாவின்
குரல்!

அதை
ஒரு காதில் வாங்கி
மறு காதில் ஒழுகிட விடுதல்
நிகழும்
தினம் தினம்!

அப்படியான ஒருநாளில்
உன் தந்தை பெயர் சொல்லி
அவரிடம் புத்தகம்
வாங்கி படி;
அவரிடம் சொல்லி வந்திருக்கிறேன்
என்கிறார் எனதருமை அப்பா!

இதை முன்னமே
சொல்லியிருக்கலாமே என
மனதுள் திட்டியபடி
அம்மாலைவேளையில்
பறந்தேன் உன் இல்லம் நோக்கி!

வந்தவனை வரவேற்றன
கொல்லைப் பக்க
பூவுடன் நீ பேசியிருந்த
பூபாளம்!

வீடு நுழைந்தவனை
அழைத்தமர்த்தி
எனதுருவத்தோடு பேசியிருந்தார் உனதப்பா;
குரல்கேட்டு
ஓடிவந்தவள்
தூணுக்கு பின்னிருந்தபடி
விழியால் பேச ஆரம்பித்தாய்
உயிர் அருவத்தோடு!

உருவத்தை அவரிடம் பேசத் தந்து
உயிரை உன்னிடம் பேசத் தந்து
நான் யாதுமற்ற
ஓர் உருவ நிலையிலிருந்தேன்
அத்தினம்!

- இன்னும் உருகும்...
காதல் கோவிலின்
கருவறையில்
தேவி உனக்கு;
தினம் தினம்
என் கண்ணீரால்
அபிஷேகம்!


பரிட்சை அறை வெளியே
முதல் தேர்விற்கு முந்தைய
பதட்டமான அந்நொடிகள்!

எங்கெங்கோ தேடி
சலிப்படைந்த
கண்கள் தரை தொட்டு
எழும்பிய சமயம்
முகமெல்லாம் புன்னகையாய்
நின்றிருந்தாய் எதிரில்!

'படிச்சிட்டியா?
நல்லா எழுது;
வாழ்த்துக்கள்!'
அவசரமாய் உதிர்ந்த வார்த்தைகள்
இறக்கை விரித்து காற்றில்
பறக்க தொடங்கியிருந்தன;
பக்கத்தில் நானும்
ஒரு காற்றாடியாய் மாறி
நானும் பறந்திருந்தேன்;
எனக்கே ஆச்சர்யம்தான்
மேலே பேசியதெல்லாம்
நான்தானா என்பதில்
எனக்கே பெரும் ஆச்சரியம்தான்!

உனக்கேற்பட்ட ஆச்சரியம்
இன்று சொல்லியா முடியும்!

உனக்கு பேசக்கூட வருமா?
அதிலும் என்னிடம் என்பதாய்
ஒரு பார்வை
மேலாய் படரவிட்டு
'இந்தா கோவில் பிரசாதம்'
கைவிரித்து நீ தர
கண்மூடி தொட்டு நெற்றியில் நான் பூச
கையிருந்த எழுதுகோல் தவறி
மண்ணில் விழுந்தது!

குனிந்து எடுத்து
நல்லா எழுது
என்று உன் தேர்வறை நோக்கி நடந்தாய்!
எனக்கு ஏனோ
மரவெட்டியும் வனதேவதையும்
மனத்திரையில் வந்துப்போனார்கள்!

எனக்கே சொல்லாமல்
வேண்டுமென்றே
எழுதுகோலை தரையில் விட்டது
அந்த உயிர் சாத்தானின் வேலை
என்பது வெகுநாள் தெரியாமலே இருந்தது!

நீ எழுதுகோல் தொட்டுக் கொடுத்த
நினைப்பில்
அன்றைய தேர்வு நன்றாகவே முடிந்தது;
அடுத்தடுத்த தேர்வுகளும்
அவ்வாறே!
மின் தகனமேடை
சடலமாய்
சலனமற்று
எரிந்து
சாம்பலாகி
காற்றுடன் கலந்து கரைந்து
காணாமல் போகின்றன
அருகில் நீயில்லா பொழுதுகள்!

- ப்ரியன்.

கருத்துகள் இல்லை: